Share it

Wednesday, September 19, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு


அத்தியாயம் - 02 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.



நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்து ஐந்து நிமிடங்களில் நான் தயாராகி வெளியே வந்தேன். அடுத்த சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்... 

Post Date 12/07/2012 | Edit date 19/09/2018 

கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்

No comments:

Post a Comment

Share it