Share it

Friday, September 7, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 02 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா



முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 


சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள். 



இதற்கான அமைச்சரவைக் கூட்டமும் விடியலில் தொடங்கும் என்ற வாய்மொழி உத்தரவு அனைத்து அமைச்சர்களுக்கும் சேனைத் தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து அமைச்சர்களும் தன்னுடைய உதவியாளர்களிடம் தாம் வகிக்கும் பொறுப்புகளின் நிலவரங்களைக் கணக்கிட்டு அதற்குண்டான விபரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டார்கள்.  

நிதித்துறையைச் சார்ந்த அமைச்சர் தற்போதைய நிதியிருப்பையும் வரவேண்டிய வருவாயினங்களையும் இன்னும் சில மாதத்திற்கு நாட்டின் நிர்வாகத்திற்குத் தேவைப்படக்கூடிய நிதியையும் ஓலையில் குறித்துக் கொண்டார். அதேபோல் நாட்டின் உணவுப் பொருட்களின் கையிருப்புகள், மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புகள், ஆயுதக் கிடங்கில் ஆயுதங்களின் இருப்பு மற்றும் தேவை என அனைத்து விபரங்களையும் சேகரித்து அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறைகளுக்கான நிலவரத்தை விரல்நுனியில் வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் கூடும் அவைக்குச் செல்ல ஆயத்தமானார்கள். 

தளபதிகள் தங்களுடைய படையின் சாதக, பாதகங்களைப் பற்றி உபதளபதிகளிடம் விவாதித்துக் கொண்டு மறுநாள் நடக்கும் விவாதத்திற்குத் தயாரானார்கள். உதவியாளர்களுக்கும், உபதளபதிகளுக்கும் எதற்காக இந்தக் கணக்கீடுகள் என்று விளங்காவிடினும் ஆனால் ஏதோ முக்கிய நிகழ்வுக்கு நம் தேசம் தயாராகிறது என்பது மட்டும் விளங்கியது. அவர்கள் தனக்கான பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு இல்லம் திரும்பினார்கள்.

அடுத்த நாளுக்கான விடியல் பல்லவ தேசத்திற்கான விடியலாய் விடிந்தது. அதிகாலையில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும் புத்த விஹாரங்களிலும் சமணப்பள்ளிகளிலும் வழிபாடுகளும் நடக்கத் தொடங்கியது. யாழின் இசையும் அதற்கேற்றாற்போல் பாடும் யுவதிகளின் குரலின் இனிமையும் காற்றைக் கிழிக்கும் காளையர்களின் கம்பு சுழற்றலும் பல்லவ தேசத்து மக்களின் பண்பாட்டையும் கலையையும் வீரத்தையும் உணர்த்தியது. 

காலைநேரத்துக் கடைவீதிகளில் வியாபரக் கூச்சலும் எருது பூட்டப்பட்ட வண்டிகளில் வாணிபப் பொருட்களின் பயணமும் உடன் பயணிக்கும் சலங்கையின் ஒலியும் இதனைக் கடந்து நகர்ந்து போக மிகப்பெரிய மதில்களையுடைய அரண்மனையும் அதைச் சுற்றி ஓடும் நதியும் நதியினுள் நாட்டிடயமாடும் கொடியும் கொடியில் மலர்ந்த பூக்களும் பூக்ககளைச் சூழ்ந்து விளையாடும் மீன்களும் மீன்களை வேட்டையாடும் முதலைகளும் என அழகும் ஆபத்தும் நிறைந்த அகழி அரண்மனையைக் காத்திருந்தது. அகழியைத் தாண்டிச் செல்லத் தேக்காலான பாலமும் பாலத்தைக் கடந்ததும் அண்ணாந்து பார்க்கத் தலைப்பாகை கீழே விழுந்திடும் உயரத்தில் நிற்கும் வாயிற்கதவுகளும் காற்றும் உள்நுழைய அனுமதிகேட்டு நிற்குமளவு பாதுகாப்பும் அரண்மனைக்குள் செல்பவர்களை சோதனை செய்யும் வீரர்களும் அவர்களின் முறுக்கு மீசையும் பார்வையால் மிரட்டும் உருண்ட விழிகளும் அவர்களிடம் மிரட்சியுடன் நிற்கும் மக்களும் என அனைத்தையும் கடந்து உள்ளே நுழைந்ததும்...

இருதேர் செல்லுமளவு இருக்கும் இரண்டாம் நிலையான வாயிலும் முதல் நிலை வாயிலுக்கும் இரண்டாம் நிலை வாயிலுக்கும் சரியான அளவு இடைவெளியும் கலைநயத்துடன் கூடிய வாயிற்கதவுகளின் வேலைப்பாடுகளும் வெள்ளி முலாம் பூசியதுபோல் வெண்சுண்ணாம்பால் மிளிரும் இரண்டாம் நிலை மதிற்சுவரும் மதிலின் மேல் இரண்டாம் நிலை அடுக்கு பாதுகாப்பும் வாயிலைக் கடந்து உள்ளே சிறிது தூரம் சென்றதும் நான்கு புறவாயிலில் இருந்து வரும் சாலைகள் சந்திக்கும் நிலையும் நான்கு வாயிலுக்கும் செல்ல நேராகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட சாலையும் இருபுறத்திலும் ராஜ்ஜியத்தின் முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும் தங்கும் மாளிகைகளும் இதை அதிசயித்துப் பார்த்துச் சிறிது தூரம் நடந்து வந்ததும் சந்தனம், மா, பலா, அரசு,புன்னை, வேம்பு என மரங்களாலும் விதவிதமான பூக்களாலும் சூழ்ந்த நந்தவனமும் இந்த இயற்கை அரணுக்கு மையத்தில் பல்லவர்களின் அரண்மனை அழகுடன் அமைந்திருந்தது. 

அகிலின் மணம் எங்கும் சூழ்ந்திருக்க, ஒவ்வொரு தூணிலுள்ள சிற்பமும் பல கதைகளைச் சொல்லியபடி நின்றிருந்தது. அதில் வியந்து லயித்து அரண்மனையின் முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும் காலத்தால் அழியாத பல வீரச்செயல்களை ஓவியமாய்த் தாங்கிய சுவர் நின்றிருந்தது இமைக்க மறந்து விழியும் விரியப் பார்த்தே கடந்து இத்தனை அழகையும் பார்த்து மெய்மறந்து ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தால் அனைத்துத் துறை அமைச்சர்களும் தளபதிகளும் தெளிவான புள்ளிவிவரங்களுடன் அமைதியாய் அமர்ந்திருந்தார்கள். 

பல்லவ மன்னரான பப்பதேவரும் இளவரசரான சிவஸ்கந்தவர்மனும் மெய்க்காப்பாளர்களின் புடைசூழ மேல் தளத்திலிருந்து ஆலோசனை மண்டபத்தை நோக்கித் தீவிரமாய் விவாதித்த படியே வந்தார்கள். முரசடித்து மன்னரின் வருகை அறிவிக்கப்பட்டது. மண்டபத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் முக்கிய நிர்வாகிகளும் எழுந்து நின்று மன்னரை மரியாதையுடன் வரவேற்கத் தயாரானார்கள். 

நீண்ட கேசம் காற்றிலாடிட ஆட்டத்தை அடக்கி கிரீடம் அம்சமாய் அமர்ந்திருக்க நெற்றியின் மத்தியில் திலகம் ஜொலித்திட முகத்திற்கு மேலும் அது அழகைக் கூட்டிட சிவந்த தோலுடன் விரிந்த மார்பில் போர் பல கண்டதிற்கான அடையாளத் தழும்புகளைத் தாங்கி நிற்க மேலே போர்த்திய பட்டாடை இலை மறையாய் காய் மறையாய் தழும்புகளைக் காட்டி நிற்க நேரான பார்வையும் விரைவான நடையும் வயதைக் கணிக்கத் திணறிட கணிப்புத் தொடங்கி முடியும் முன் வேகமாய் ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தார் மன்னர். இளவரசரும் இளமை ததும்பிடும் வசீகரத்துடன் மன்னரின் அதே கம்பீரத்துடன் மன்னருக்குப் பின்னே மண்டபத்திற்குள் நுழைந்தார். மெய்காப்பாளர்களின் தலைவர் மட்டும் ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தார். மற்ற வீரர்கள் மண்டபத்திற்குப் புறத்தே பாதுகாப்புக்காக நின்று கொண்டார்கள். 

ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்ததும் அனைத்து பெருமக்களும் வாழ்த்து கோஷங்களுடன் வரவேற்றார்கள். மன்னர் தன்னுடைய இருக்கைக்குச் சென்று திரும்பி அனைவருக்கும் இரு கரம்குவித்து வணக்கத்தைக் கூறிவிட்டு ஒவ்வொருவரின் முகத்தையும் பார்வையிட்டார். அனைவரின் முகத்திலும் தெளிவு இருந்தது. அனைவரையும் கையமர்த்தி அமரச் சொல்லிப் பின் அமர்ந்தார். சில விநாடிகள் நிசப்தம் நிலவியது மண்டபம் முழுவதும். "ஏன் தந்தையே இப்படியொரு பேரமைதி, புயலுக்கு முன்னிருக்கும் அமைதி போன்று..." என்று மௌனத்தைக் கலைத்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மர். "ஆம் சரியாய்த் தான் சொன்னாய் சிவா. இது புயலுக்கு முன்னிருக்கும் அமைதி தான்" என்று மெல்லிய புன்முறுவலுடன் செல்லமாய்த் தன் மகனும் வருங்கால மன்னருமான சிவஸ்கந்தவர்மரைப் பார்த்துச் சொன்னார் மன்னர். வார்த்தையின் பொருள் விளங்கிய இளவரசரும் சிரித்தார் தந்தையைப் பார்த்து.

அமர்ந்திருந்த பெருமக்களுக்கு விசயம் விளங்கினாலும் அமைதி காத்து மன்னரின் வாய்மொழிச் செய்தியைக் கேட்க ஆவலாய் அமர்ந்திருந்தார்கள். மன்னர் அமைச்சர்களைப் பார்த்து "நான் நேற்று காலை தங்களிடம் ஒப்படைத்த பணியை முடித்து விட்டீர்களா?" என்றார் மென்மையாய். அனைவரும் ஒருமித்த குரலில் முடித்தாயிற்று அரசே என்றார்கள் பணிவுடன். 

"நல்லது விசயத்திற்கு வருகிறேன். சோழ தேசத்தின் கையிலிருக்கும் தொண்டை மண்டலத்தை நம் வசப்படுத்த நாம் நீண்ட நாட்களாய்க் காத்திருந்த நாள் கனிந்து கைகூடி வந்துவிட்டது. அதற்காக நாமெடுக்கும் முதல் நகர்வுக்கான திட்டத்தை இளவரசர் தெரிவித்திருக்கிறார். அவரின் திட்டம் எனக்குச் சரியெனப் படுகிறது. அந்தத் திட்டத்தை நீங்களும் கேளுங்கள், பின் இதைப் பற்றி விவாதிப்போம்" என்று தன்மையாய்க் கூறிவிட்டு, "சிவா நீயே நம் வியூகத்தை விவரி" என்று இளவரசரிடம் கூறினார்.  




மன்னருக்கு நன்றியைக் கூறி ஆசனத்திலிருந்து எழுந்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மர். தொண்டையைச் சரிசெய்து கொண்டு "நான் வியூகங்களைப் பற்றி வினவும் முன் சில கேள்விக்கான விடைகளை நமது அமைச்சர் பெருமக்களிடம் தெளிவு பெறவேண்டும் தந்தையே" என்றார் மன்னரைப் பார்த்துப் பணிவுடன். "ம்... ஆகட்டும் கேள்" என்றார் மன்னர்.

"முதலில் நான் உணவுப் பொருட்கள் மற்றும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு பற்றிய விபரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சரே விபரங்கள் கைவசம் உள்ளதா?" என்று சந்தேகத்துடன் கேட்டார் இளவரசர். அமைச்சர் சாந்தமான குரலில் "உள்ளது இளவரசே" என்றார் பணிவுடன். "சொல்லுங்கள் அமைச்சரே..." என்றார் ஆர்வமாய் இளவரசர். "நேற்றைய கணக்கின்படி நான்கு மாதத்திற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கிடங்குகளில் பாதுகாப்பாய் உள்ளது இளவரசே" என்றார் தீர்க்கமாய் அமைச்சர். 

"நல்லது... அடுத்து நாட்டின் நிதிநிலை தற்பொழுது எவ்வாறு உள்ளது அமைச்சரே?" என்று நிதியமைச்சரின் முகம் பார்த்துக் கேட்டார் இளவரசர். "இளவரசே நிதிநிலை நன்றாய் உள்ளது. எவ்வித வருமானம் இல்லாவிடினும் இருமாதத்திற்கு நாட்டைச் சிறப்புடன் நிர்வகிக்க இயலும்..." என்று அமைச்சர் முடிக்கும் முன்னரே "எப்படி இவ்வளவு துல்லியமாய்ச் சொல்ல முடிகிறது அமைச்சரே?" என்று எதிர் கேள்வியைத் தொடுத்தார் இளவரசர். "இளவரசே நாட்டிற்கு மிகப்பெரும் பிணியே பசியும் பஞ்சமும் தான். நேற்று நீங்கள் உரைத்ததும் உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயமும் எவ்வாறு உள்ளது என்று அமைச்சரிடம் வினாவினேன், அவரும் சிறப்பாய் உள்ளது. நீர் இருப்பும் வேளாண்மையும் கடந்த சில வருடங்களை விட இம்முறை இறைவனின் புண்ணியத்தில் மாரியும், விளைச்சலும் நமக்கு சாதகமாய்த் தான் உள்ளது என்றார்... அதுவே எமக்குப் பெரும் துணிச்சலைத் தந்தது இளவரசே. நிலுவையிலிருந்த வருமானங்களை விரைவாக வசூலிக்க கடைக்கோடி கிராமம் வரை ஓலை அனுப்பியிருக்கிறேன் இளவரசே. இம்முறை வேளாண்மை சிறப்பாய் இருப்பதால் அனைத்து தொழிலும் சிறப்பாய்த் தானிருக்கும், அதனால் வரியினங்களும் கூடும். நான் இருமாதம் என்று குறைத்துத் தான் மதிப்பிட்டிள்ளேன் இளவரசே..." என்றார் விரிவான விளக்கத்துடன் நிதியமைச்சர். "அருமை.. அருமை.. நன்றி அமைச்சரே" என்று பெருமிதத்துடன் வாழ்த்தி அமைச்சரை அமர்த்தினார் இளவரசர் சிவஸ்கந்தவர்மன். 

"இன்னும் யாரிடமாவது கேள்வி கேட்க வேண்டுமா சிவா?" என்றார் மன்னர் சிரித்தவாறே. "போதும் போதும் தந்தையே! இந்தத் தகவல் இப்போதைக்குப் போதும்... நான் விசாரித்து அறிந்ததும் நம் அமைச்சர்களின் பதிலும் ஒரே மாதிரி தான் உள்ளது தந்தையே" என்றார் இளவரசர். "பிறகேன் தாமதம் திட்டத்தைப் பற்றிக் கூறு" என்றார் மன்னர். 

"உத்தரவு தந்தையே!" என்று பேச ஆரம்பித்தார். "நாம் பல மாதங்களாய் எல்லைகளை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசித்து வந்தோம். அதற்குச் சரியான நேரம் இப்பொழுதுதான் அமைந்து வந்திருக்கிறது. அதற்கு முன் நம் பல்லவ அரசின் நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவே உங்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன். சரி நாம் தொண்டை மண்டலப் படையெடுப்பைத் தற்போது நிகழ்த்துவதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருப்பினும் முன்னரே தாரளமாய் உரைக்கலாம் உங்களின் கருத்தை!" என்றார் இளவரசர். 

அமைச்சர் ஒருவர் தயங்கியபடி எழுந்து "தவறாக நினைக்க வேண்டாம் இளவரசே! தொண்டை மண்டலப் போர் இப்பொழுது நம் தேசத்திற்கு பாதுகாப்பான போராக இருக்குமா? நாம் இப்போருக்கு அதிகம் முனைப்பு காட்டுவது ஆபத்தில் முடிந்திடுமோ? என்ற பயத்தினால் தான் கேட்கிறேன்" என்று மெல்லிய குரலில் பணிவுடன் கேட்டார். புன்முறுவலை விடுத்து "ஏன் சந்தேகம் அமைச்சரே, எதனால் இவ்வினா உங்களுக்கு எழுகிறது?" என்றார் இளவரசர். 

"இளவரசே தாங்கள் அறியாததில்லை. நாம் தொண்டை மண்டலத்தை அடையும் முன்னர் இடையில் வேங்கட மலையிலிருக்கும் களப்பிரர்களை வீழ்த்த வேண்டும். அதுவும் அடர்ந்த வனப்பகுதி..." என்று இழுத்தார் அமைச்சர். "சரிதான், நீங்கள் சொல்வது மிகச் சரிதான். ஆனால் இப்படியே காரணத்தைச் சொல்லிக் கொண்டே போனால் நாம் எப்பொழுது தான் தொண்டை மண்டலத்தை அடைவது? ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவது? இம்முறை அனைத்து காரணிகளும் நமக்கு சாதகமாய் அமைந்துள்ளது. இம்முறை தவறவிடக் கூடாது அமைச்சரே! அதற்காகத்தான் இவ்வளவு முனைப்பு" என்று ஆக்ரோஷமாய் பேசினார் இளவரசர். 

சாந்தமடைந்து அவரே தொடர்ந்தார். "களப்பிரர்கள் நகர்வுக்கான தடை மிகப்பெரும் தடை. அதில் மாற்றுக் கருத்தில்லை. காரணம் அவர்களின் ராஜ்ஜியம் கொஞ்சம் வலிமையடைந்து வருகிறது. நட்பு நாடுகள் கரம்கோர்த்தும் தனது வலிமையை அதிகரித்து நந்தி மலையிலிருந்தவர்கள் படிப்படியாய் நகர்ந்து இன்று வேங்கடத்தில் வந்து நிற்கிறார்கள். இதில் நமக்கு நன்மை என்னவெனில் அவர்கள் கூட்டங்களாக குழுக்களாகப் பிரிந்து இருக்கிறார்கள். வேங்கடத்தில் இருப்பது களப்பிரர்களின் ஒரு குழுவே. நாம் முன்னறிவிப்பின்றி ஒரு தாக்குதலைக் களப்பிரர்கள் மேல் நிகழ்த்தி அவர்கள் ஒன்றிணையும் முன்னர் அருவா வடதலைக்குள் புகுந்து சோழர்கள் மேல் தாக்குதல் நடத்தி ராஜ்ஜியத்தை நிலை நிறுத்த வேண்டும்!"

"இளவரசே தவறாக எண்ண வேண்டாம்! களப்பிரர்களை வீழ்த்தி நகர்வது சுலபமாய் இருந்தாலும் சோழர்களின் கடல் போன்ற சேனையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? சோழர்களின் வீரத்தைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களைச் சீண்டுவது புலியின் குகைக்குள் தனித்துச் செல்வதுபோல் ஆகாதா? இது நமக்குப் பின்னடைவைத் தந்துவிடாதா இளவரசே?" என்று பணிவுடன் சொன்னார் தளபதிகளில் ஒருவர். 

"ம்... அருமை... உங்களின் உவமையும் எதிரியானாலும் அவர்களைப் பாராட்டும் விதமும்... நீர் புலவராக வேண்டியவர் தளபதியாரே!" என்று கூறியதும் மண்டபமெங்கும் சிரிப்பொலி பரவியது. "தளபதியாரே நன்றாகவே தெரியும்! தெரிந்த பின்புதான் இந்த முடிவை எடுத்தேன்" என்றார் இளவரசர் புன்னகை மாறாது. தளபதி புரியாமல் இளவரசரை ஆச்சரியத்துடன் பார்த்தார். 

"தளபதியாரே! சோழர்களின் ஆட்சியில் தெளிவு குன்றத் தொடங்கியிருக்கிறது. இதை அறிவீரா தாங்கள்?" 

"ஆம் இளவரசே! செங்கணார் காலத்திற்குப் பிறகு பல குழப்பங்கள் நிலவி வருகிறது" என்று பதிலளித்தார் தளபதியார். 

"தற்பொழுது தலைநகரத்தைப் புகாரிலிருந்து உறையூருக்கு மாற்றி விட்டார்கள், தெரியுமல்லவா தங்களுக்கு?" என்றதும் "ஆம் தெரியும் இளவரசே!" என்று தலையசைத்தார் தளபதி. "தலைநகர் மாற்றத்தினால் நிர்வாகத்தில் குழப்பம் நிலவிவருகிறது. அதை அறிந்தீர்களா?" 

"உண்மைதான் இளவரசே, நிர்வாகத்தில் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்றார்கள் என்னுடைய ஒற்றர்கள்..."

"ஒன்று பரந்த தேசத்தை நிர்வகிக்கும் திறன் வாய்ந்த ஒரு அரசர் சோழநாட்டில் தற்பொழுதில்லை. இரண்டாவது புகாரில் தலைநகர் இல்லை. புகார் தலைநகரமாய் இருந்தால் வேங்கடத்தைத் தாண்டியதும் சோழத்தின் பெரும் சேனை நம் முன் நிற்கும். ஆனால் இப்பொழுது உறையூர் தலைநகர். ஆகவே முன்பிருந்த அளவிற்கு பாதுகாப்பு புகாரில் இருக்காது. மூன்றாவது நிர்வாகத்தில் தற்போதுள்ள குழப்பநிலை. ஆட்சியை நிலைப்படுத்தும் நிர்வாகத்திலே குழப்பம் இருப்பின் அரசனின் மனநிலை தெளிவில்லாமல் தீர்க்கமான முடிவெடுக்க முடியாத நிலையில் தானிருக்கும். சோழர்களுக்கு விசயம் அறிந்து தயாராவதற்கு முன் நாம் அருவா வடதலை நாட்டில் காலூன்றிவிட்டால் சோழ அரசன் நம் மீது போர்தொடுக்க முனைவானா? நிர்வாகத்தைக் கவனிப்பானா? இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பானா?" என்று பதிலையே கேள்வியாய் சபையினரிடம் வைத்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மன். 

தளபதியார் முகம் மலர்ந்தபடி "இருப்பதைக் காக்கவே நினைப்பார் இளவரசே." அமைச்சரின் தோள்பிடித்து "இப்பொழுது விளங்கியதா இது சரியான சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் சொன்னதிற்கான காரணம்?" என்று அனைவரையும் பார்த்து கேட்பது போல் அந்த அமைச்சரிடம் கேட்டார் இளவரசர். சபையோர்கள் அனைவரும் "விளங்கியது இளவரசே!" என்றார்கள். அமைச்சரோ மௌனமாய்த் தலையசைத்தார். இளவரசரும் கையைப்பற்றி அமைச்சரைத் தேற்றி நகர்ந்தார். 

"ஆனால் இதில் மற்றுமொரு சிக்கலும் உண்டு. நாம் போர் தொடுப்பதைக் களப்பிரர்கள் முன்பே அறிந்துவிட்டார்கள் என்றால் நட்பு நாட்டின் துணையோடு நம்மை எதிர்ப்பார்கள். இங்கு தாமதமாகும் நேரத்தில் அவர்களின் நந்திமலையிலிருக்கும் சேனை நம் பல்லவ தேசத்திற்குள் நுழைந்தாலோ அல்லது மற்றொரு முனையிலிருந்து நம்மைத் தாக்கினாலோ நம் திட்டமனைத்தும் வீணாகிவிடும். அதனால் நம் பல்லவ தேசத்திற்குத் தீங்கு நேராதவாறு நகர்ந்து நாட்டை விரிவுபடுத்த வேண்டும்."

"இளவரசே, எப்பொழுது நாம் போர்தொடுக்கப் போகிறோம்?" என்று தளபதி கேட்டார். "இன்னும் பத்து நாட்களில்...!" என்றார் இளவரசர். "அதற்கு முன் படையெடுப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சேகரித்துத் தரம் பார்த்துக் கொள்ளுங்கள். வீரர்களை நம் இளைஞர் பயிற்சிப் பட்டறையிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். போர் தொடுக்கப் போகிறோம் என்பதை மட்டும் ரகசியம் காத்து வைத்திருங்கள்...!"

"சந்தேகமோ இல்லை மாற்றுக் கருத்தோ இருப்பின் தாராளமாய்க் கூறுங்கள்" என்றார் சாந்தமாய் இளவரசர். இம்முறை அனைவரும் "சம்மதம் இளவரசே!" என்று ஒற்றைக் குரலில் கூறினார்கள். அனைவரும் ஒத்துழைக்கும் படி கேட்டு சபைக்கு வணக்கத்தையும் நன்றியையும் கூறி அமர்ந்தார் இளவரசர். 

"நீங்கள் அனைவரும் விடைபெறுவதற்கு முன் உங்களிடம் என்னுடைய மனந்திறந்து சில விசயங்களைப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார் கொஞ்சம் தழுதழுத்த குரலில் மன்னர். சபையினர் அனைவரும் நகராது மன்னரையே பார்த்து அமர்ந்திருந்தார்கள். 

"நாம் இப்பொழுது சந்திக்கப் போகும் போரானது ஒருநாளுக்கான போரில்லை! ஒரு தலைமுறையினரின் கனவை நினைவாக்கக் கூடிய போர். இதுவரை போராடி வாழ்ந்து வந்த தேசத்தின் உயர்வை உலகிற்குப் பறைசாற்றிடும் போர். இதுபோன்றதொரு நாள் அமையாதா என ஏங்கிய நாட்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமா? நம் தேசத்து மூத்த குடிகளைக் கேளுங்கள். அப்பொழுது உங்களுக்குப் புரியும். நாம் இப்பொழுது பெறும் வெற்றி ஒவ்வொன்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தென உணருங்கள். நம் பல்லவ தேசத்தின் உயர்வுக்காக நாமிட்டிருக்கும் விதை என்று உணருங்கள். இன்று யாருக்கும் அடிமையில்லாது பல்லவ தேசத்தை மீட்டு வந்துவிட்டோம். ஆனால் பல்லவ தேசம் மாபெரும் சாம்ராஜ்யமாய் ஜொலிக்க நாம் எடுக்கும் இந்த அடி மிக முக்கியமானது. பிசகினால் வீழ்வது நாம் மட்டுமில்லை நம் தேசமும் நம் முன்னோர்களின் கனவும் நம் சந்ததியினரின் எதிர்காலமும் தான். நினைவில் வைத்து செயல்படுங்கள்...!" என்று போருக்கான காரணத்தை உணர்வுப்பூர்வமாய் அவையிலிருக்கும் இளங்காளைகளுக்கு விளக்கினார். 

சபையிலிருந்த அனைவரும் போருக்கான முக்கியத்துவத்தை உணரத் துவங்கினார்கள். அனைவருக்குள்ளும் புதுரத்தம் பாய்ந்தது போல் இருந்தது.

"இளவரசர் போரின் வியூகத்தை விபரமாய்த் தெளிவாய் விளக்கி விட்டார். போர் தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டியதை உங்களுக்குக் கூற நினைக்கிறேன். நாம் முதலில் நம் தளபதிகளின் கீழிருக்கும் ஒற்றர் குழு களப்பிரர்களின் எல்லைக்குள் சென்று நிலவரத்தைக் கண்காணித்து மீண்டுமொரு முறை உறுதி செய்து செய்தி அனுப்பட்டும், பிறகு வீரர்கள் சிறுசிறு குழுக்களாய் வனத்திற்குள் பிரவேசிக்கட்டும். இங்கிருந்தே ஒன்றிணைந்து செல்வது வேண்டாம். வனத்திற்குள் சென்று பெரும் படையாய் உருவெடுக்கட்டும். நான் ஏன் இதைச் சொல்ல வருகிறேன் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எள்ளளவும் எதிரிக்கு சந்தேகம் வராமல் நம் நகர்வு இருக்க வேண்டும். தெளிவாய் அதே நேரத்தில் நிதானத்துடன் இருங்கள்!" என்று அறிவுரையையும், ஆலோசனையையும் மன்னர் கூறி முடித்ததும்...

"அரசே நீங்கள் உரைத்ததை அனைவரும் நிச்சயம் நன்கு உணர்ந்திருப்பார்கள். உங்களின் ஆசியைக் கூறி வழியனுப்பி வையுங்கள்" என்றார் தலைமை அமைச்சர். "நிச்சயமாய்...!" என்று ஆசனத்திலிருந்து கம்பீரமாய் எழுந்து நின்றார். அனைத்து தளபதிகளும் அமைச்சர்களும் மற்றும் இளவரசரும் முன்கால் மண்டியிட்டுத் தலைவணங்கி நின்றார்கள் அரசர் பப்பதேவரின் முன். வலக்கையை உயர்த்தி "விஜயீ பவ... சிரஞ்சீவி பவ..." என்று ஆசி வழங்கினார். அனைவரும் எழுந்து அமைதியாய் நின்றார்கள். "சரி. இனி ஆக வேண்டிய வேலையைக் கவனியுங்கள். தீர்க்கமாய் திடமாய் இருங்கள்" என்று கூறி அனைவரையும் வழியனுப்பி வைத்தார் பல்லவ மன்னர். 

"உத்தரவு அரசே!" என்று விடைபெற்றார்கள் அனைவரும். இளவரசர் தனக்கான பணியைச் செய்ய வேகமாய்க் கிளம்பினார். மன்னர் மட்டும் தனியாய் நின்று கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் இரு போரைச் சந்திக்கப் போகும் வீரர்களை எண்ணி மன வருத்தமும் இந்தச் சமயத்தை நழுவவிடக் கூடாது என்ற எண்ணமும் அவருள் ஓடிக் கொண்டிருந்தது.

என்ன நடக்கும் பார்ப்போம்....

- சதீஷ் விவேகா

#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 


No comments:

Post a Comment

Share it