சொந்தங்களோடும் நட்புகளோடும் ஆண்டாண்டாய் சொந்த ஊரில், வாழ்பவனின் சிக்கல் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? ஒரு வருடத்திற்கு சுமாராய் 50 முகூர்த்த நாட்கள் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்சம் 200 அழைப்புகள். சராசரியாக ஒரு முகூர்த்ததிற்கு மூன்று அல்லது நான்கு அழைப்புகள். தூரத்தில் மண்டபம் இருந்தால், முதலில் அந்த இடத்திற்குச் செல்வதும், அப்படியே குறைத்து, குறைத்து, வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கடைசியாய்ச் செல்வது. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால், நேரமாகிப் போனாலும், காலையில் முதல் வேலையாக இரவு விட்டுப் போன இடத்திற்கு சென்று வந்துவிடுவது. இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.